ஐதராபாத்: தான் பிறந்த சிந்தமடக்கா கிராமத்தில் வசிக்கும் 2000 குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் பரிசு வழங்குவதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடியாக அறிவித்தார். தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியின் தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் நேற்று முன்தினம் சித்திப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சிந்தமடக்கா கிராமத்திற்கு சென்றார். இது முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்த ஊராகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது வாக்களிப்பதற்காக சென்ற அவர் நீண்ட நாளுக்கு பின் தனது சொந்த ஊருக்கு சென்றார். அவருடன் சித்திபேட்டை எம்எல்ஏ ஹரிஸ்ராவ் உடன் சென்றார். அங்கு சுமார் 5 மணிநேரம் தங்கியிருந்த முதல்வர் சந்திரசேகரராவ், தனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர் ராகவா ரெட்டி வீட்டுக்கு சென்றார். அப்போது பிற்பட்ட வகுப்பு மாணவிகள் தங்கி படிக்கும் பள்ளிக்கான அடிக்கல்லை நாட்டினார்.