வயநாட்டில் கம்பளி விற்பனைக்கு சென்ற தமிழக தம்பதி மீது சரமாரி தாக்குதல்: லாரி டிரைவர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு அருகே தமிழக தம்பதியை தாக்கிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். கேரள  மாநிலம் வயநாடு  மாவட்டம் கல்பெட்டாவில் நடுரோட்டில் வைத்து ஒரு  பெண்ணையும், ஒரு ஆணையும்  ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி கடந்த 3 தினங்களாக வாட்ஸ்  அப்பில் வைரலாக பரவியது. இந்த தகவல் அம்பலாவயல்  போலீசுக்கு கிடைத்தது.  போலீசார் நடத்திய விசாரணையில், கல்பெட்டா அம்பலாவயல்  பகுதியில் தாக்குதல்  சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து  போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தாக்கப்பட்ட ஆணும், பெண்ணும்  தமிழகத்தை சேர்ந்த கணவன், மனைவி என்பதும், அவர்கள் கம்பளி விற்பதற்காக  கல்பெட்டா வந்ததும், அவர்களை குடிபோதையில்  இருந்த அதே பகுதியைச் சேர்ந்த  லாரி டிரைவரான ஜீவானந்தன் என்பவர் தாக்கியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக  அம்பலாவயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜீவானந்தனை கைது செய்தனர். இதுகுறித்து  தாக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்யவில்லை. இது தொடர்பாக மாநில மகளிர்  ஆணையமும்  விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: