புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்த போது, நரேந்திர மோடி என்ன பேசினார் என்பதை விளக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யுங்கள் என பிரதமர் மோடி கேட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அப்படி எந்த கோரிக்கையையும் டிரம்பிடம் பிரதமர் மோடி வைக்கவில்லை என இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்தாலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. அதுமட்டுமல்லாது, இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.