ஈரோடு : தீபாவளி வரை ஈரோடு ஜவுளிச் சந்தையை அகற்றக் கூடாது என கோரி வியாபாரிகள் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. தென்னரசுவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் இங்கு தான் துணி உற்பத்தி விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக ஈரோடு ஜவுளி சந்தை புகழ் வாய்ந்தது. தற்போது மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ .54 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் அமைக்க இங்கு முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ஜவுளி சந்தையை அகற்றி அங்கு ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஜவுளி வியாபாரிகள் தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்படவில்லை. எனவே ஜவுளி சந்தை அகற்றும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆனால் கடந்த வாரம் எந்த வித ஒரு முன்னறிவிப்பும் இன்றி ஜேசிபி எந்திரம் மூலம் கடையை அகற்றும் பணி தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் 1000- க்கும் மேற்பட்ட ஜவுளி வியாபாரிகள் ஜேசிபி எந்திரத்தை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தீபாவளி முடியும் வரை ஜவுளி சந்தையை அகற்றும் பணியில் ஈடுபடக் கூடாது என்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. தென்னரசுவிடம் வியாபாரிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.