பாட்னா : பீகாரில் நாகபஞ்சமி எனப்படும் பாம்பு திருவிழா வினோதமான முறையில் கொண்டாடப்படுகிறது. அம்மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள காளி கோயிலில் நாகபஞ்சமி வ வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் அந்த மாவட்டம் மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் உள்ள பாம்பாட்டிகள் கலந்து கொள்வார்கள். நாகபஞ்சமியை முன்னிட்டு ஒன்றாக கூடும் அவர்கள், ஆற்றில் இறங்கி மீன்பிடிப்பதை போல பாம்புகளை பிடிக்கிறார்கள்.
கைகளிலும் தலையிலும், கழுத்திலும் பாம்பினை போட்டுக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். வயது பேதமின்றி பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருமே பாம்புகளுடன் கோயிலை நோக்கி அணிவகுத்துச் செல்வது பார்ப்பவர்களை ஆச்சரியப்பட மட்டுமல்ல அச்சம் கொள்ளவும் வைக்கிறது. பாம்புகளுடன் கோயிலை அடைந்த பின் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த பண்டிகை பரம்பரை பரம்பரையாக கொண்டாடப்படுவதாக கூறும் பாம்பாட்டிகள், இத்திருவிழாவில் பங்கேற்றால் நினைத்த காரியங்கள் கைக்கூடும் என்று நம்புகிறார்கள். இந்த திருவிழா கடந்த 300 ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றனர். இதுகுறித்து கிராம மக்களிடம் கேட்டதற்கு, தங்களுக்கு பகவதி அம்மனின் அருள் இருப்பதாகவும், அதனால் பாம்புகளால் எந்தவித தீங்கும் ஏற்பட்டதே இல்லை என்று கூறுகின்றனர்.