ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரை மேற்கொள்வோரில் சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால் இந்தோ திபெத்திய எல்லைக் காவலர்கள் ஆக்சிஜன் வழங்கி வருகின்றனர். தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலையில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. இதில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 15 வரை 46 நாட்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் பகல்காம், கந்தர்பால் மாவட்டத்தின் பல்தால் மலைப்பாதைகள் வழியாக பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். கடந்த 22 நாட்களில் 2,85,381 பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். இதற்கிடையில், யாத்திரைக்கு வந்த இடத்தில் உடல்நலக்குறைவு மற்றும் மிக உயரமான மலைப்பகுதியில் பிராணவாயு பற்றாக்குறை, நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமர்நாத் யாத்திரை சென்றவர்களில் அடுத்தடுத்து 18 பேர் உயிரிழந்திருந்தனர்.