காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் இன்று இளம்பச்சை நிற பட்டாடை உடுத்தி மல்லிகைப்பூ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், குளத்தில் இருந்து எழுந்தருளி சயன கோலத்தில் காட்சியளிக்கும் அத்தி வரதரை தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். நகரேஷூ காஞ்சி என்று சிறப்புடன் வரலாற்றில் காஞ்சிபுரத்தை குறிப்பிடுகின்றனர். இத்தகைய காஞ்சிபுரத்தில் உள்ள வைணவத் தலங்களில் உலகப்புகழ் பெற்றது வரதராஜப் பெருமாள் கோயில். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீரிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கும் விசேஷம் இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஆகஸ்ட் 17ம் தேதி வரை 48 நாட்கள் நடைபெற உள்ளது.
ஜூலை 1ம் தேதி முதல் 24ம் தேதி வரை முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், ஜூலை 25ம் தேதிமுதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை நின்ற கோலத்திலும் 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இந்த வைபவம் தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் ஆர்வத்துடன் அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 22 நாட்களில் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இன்று அத்திவரதர் இளம் பச்சை நிற பட்டாடை உடுத்தி மல்லிகைப்பூ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அத்திவரதரை தரிசிக்க முடிவு செய்துள்ளதால் காஞ்சியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக கேரள மாநில ஆளுநர்கள் தரிசனம் செய்த போது இவ்வாறு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.