திருமணம் செய்ய காதலி மறுத்ததால் தனிமையில் எடுத்த படங்களை பேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்தவர் கைது

ஆலந்தூர்:  கிண்டி ஈக்காட்டுதாங்கல் காவேரி தெருவில் வசிப்பவர் சாந்தி (25) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர், அங்குள்ள ஒரு துணிக்கடையில்  விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிங்கப்பூரில் கார் ஓட்டுனராக வேலை செய்து வந்த சிவகங்கை மாவட்டம் சவரபேட்டையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், பேஸ்புக் மூலம் சாந்திக்கு அறிமுகமானார். கடந்த 4 மாதங்களாக இருவரும் காதலித்து வந்ததாகவும்,  கடந்த 3 மாதத்திற்கு முன்பு  சிங்கப்பூரிலிருந்து தனது சொந்த ஊருக்கு  வந்த  ராதாகிருஷ்ணன் (32), அடிக்கடி சென்னை வந்து சாந்தியை அழைத்துக் கொண்டு பல இடங்களுக்கு ஜாலியாக சுற்றியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக ராதாகிருஷ்ணனிடம் பேசுவதை சாந்தி  தவிர்த்துள்ளார். இதனால் கோபமடைந்த  ராதாகிருஷ்ணன் கடந்த 15ம் தேதி நேராக, அவரது வீட்டிற்கு வந்து  தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நாம் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை முகநூலில் வெளியிடுவேன் என  மிரட்டியுள்ளார். இதனால் வேதனையடைந்த சாந்தி கிண்டி மகளிர் காவல்நிலையத்தில்  ராதாகிருஷ்ணன் மீது புகார் கொடுத்தார். மகளிர் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நேற்றுமுன்தினம்  ராதாகிருஷ்ணனை கைது செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: