ஒரத்தநாடு: தஞ்சை அருகே பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்து, ரகசியமாக குடும்பம் நடத்திய அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவி தூக்கில் மர்மமாக இறந்து கிடந்தார். ஈரோடு மாவட்டம் பாலவாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகள் இந்துமதி (20). இவர், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு பேஸ்புக் மூலம் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்த டி.புதுக்கோட்டையை சேர்ந்த எலக்ட்ரீசியன் மகாலிங்கம் மகன் சதீஷ்குமாருடன் (25) நட்பு கிடைத்தது. இது நாளடைவில் காதலாக மலர்ந்தது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும், கடந்த 2 ஆண்டுகளாக பேஸ்புக்கில் பேசி வந்ததுடன் அடிக்கடி நேரிலும் சந்தித்து வந்தனர்.இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன் வீட்டுக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர். ஒரத்தநாட்டில் விடுதியில் தங்கியிருப்பதாக கூறி விட்டு இந்துமதி, கணவருடன் தனியாக ஒரத்தநாடு எழுத்துக்கார தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததுடன் கல்லூரிக்கும் சென்று வந்துள்ளார்.