திருவில்லிபுத்தூர்: அத்தி வரதரை மீண்டும் தண்ணீருக்கு அடியில் வைக்கக்கூடாது என, திருவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மட ஜீயர் கூறியுள்ளார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், குளத்தில் இருந்து எழுந்தருளி சயன கோலத்தில் காட்சியளிக்கும் அத்தி வரதரை தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இவர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீரில் இருந்து வெளியே வருகிறார்.இதுகுறித்து, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த காலங்களில் திருட்டு பயம் காரணமாக காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை நீருக்கடியில் வைத்தனர். தற்போது அது தேவையில்லை. பல்வேறு மடாதிபதிகள் அத்தி வரதரை மீண்டும் தண்ணீருக்கு அடியில் வைக்கக் கூடாது என என்னிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கை விடுக்க உள்ளோம். நான் அதற்கான முயற்சியை செய்து வருகிறேன். அத்தி வரதர் வெளியில் இருந்தால்தான் நன்கு மழை பெய்யும். திருச்சி ரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணபிரேமி என்ற உபன்யாசகரின் கனவில் தோன்றிய அத்தி வரதர், ‘தன்னை மீண்டும் தண்ணீருக்கடியில் வைக்கக் கூடாது’ என தெரிவித்ததாக, அவர் என்னிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.