×

3 பிள்ளைகள் பெற்றும் கவனிக்க ஆள் இல்லை பெற்ற தாயை தேவாலயத்தில் ஆதரவற்று விட்டுச் சென்ற மகன்: கண்ணீருடன் முதியோர் இல்லத்திற்கு சென்ற மூதாட்டி

சேலம்: சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சிஎஸ்ஐ இமானுவேல் தேவாலயத்தில், நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை ஒரு சேரில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தனியாக அமர்ந்திருந்தார்.  இதனை கண்ட தேவாலய நிர்வாகிகள், அந்த மூதாட்டியிடம் விசாரித்தனர். அதில், அதிர்ச்சியான தகவல்களை அவர் கூறினார். அதன் விவரம் வருமாறு: சேலம் பாரதிநகரை சேர்ந்தவர் ஜாய்ராணி (82). அரசு மருத்துவமனையில் செவிலிய கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது கணவர், சர்வேயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில், தனது ஓய்வுக்கு பின், ஜாய்ராணி தனது மகன்கள் வீட்டில் தங்கியுள்ளார். ஒரு மகன் சென்னையிலும், மற்றொரு மகன் ராசிபுரத்திலும் வசிக்கின்றனர். மகளை சென்னையில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். 80 வயதை கடந்த நிலையில், ராசிபுரத்தில் உள்ள மகன் பராமரிப்பில் ஜாய்ராணி இருந்துள்ளார். அங்கு அவரை சரியாக கவனிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், தனது மகன், தன்னை காரில் அழைத்துக் கொண்டு வந்து, ஆலயத்தில் நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு சென்று விட்டார். இனிமேல் எனது வீட்டுக்கு வராதே.. என கறாராக கூறி விட்டுச் சென்றதாக மூதாட்டி ஜாய்ராணி தெரிவித்தார். பின்னர், சேலம் கோரிமேடு போதிமரம் முதியோர் இல்லத்திற்கும், ஆதரவற்றோரை மீட்கும் சேலம் இளைஞர் குழுவினருக்கும் தகவல் கொடுத்தனர். முதியோர் இல்ல நிர்வாகிகள் அங்கு வந்தனர். அவர்கள், மூதாட்டி ஜாய்ராணியின் 2 மகன், ஒரு மகளை தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள், பெற்ற தாயை ஏற்கும் மனநிலையில் இல்லை என்பதை அறிந்தனர். இதையடுத்து போதிமரம் முதியோர் இல்லத்திற்கு, மூதாட்டி ஜாய்ராணியை அழைத்துச் சென்றனர். அப்போது அவர் கூறுகையில், ‘என்னை இனிமேல் எனது மகன் வீட்டிற்கு மட்டும் கொண்டு சென்று விடாதீர்கள். நான் இங்கேயே இருந்துவிட்டு போகிறேன்,’ என்றார்.



Tags : 3 children, mother, church, grandmother
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...