புதுடெல்லி: போலி வாகன இன்சூரன்ஸ் எண்ணிக்கை, கடந்த 2 ஆண்டுகளில் இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாக, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வாகனங்களுக்கு காப்பீடு கட்டாயம். ஆனால், காப்பீடு கட்டணங்கள் உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் தயக்கம் காட்டுகின்றனர். சிலர் புதுப்பிக்க தவறி விடுகின்றனர். ஆனால், போக்குவரத்து போலீசார் சோதனையில் சிக்கினால் அபராதம் செலுத்த வேண்டி வரும் என்பதால், போலி காப்பீடுகளுடன் சிலர் உலா வருகின்றனர் என கூறப்படுகிறது. இவ்வாறு போலி மோட்டார் வாகன காப்பீடு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2016-17 நிதியாண்டில் 498 போலி காப்பீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2017-18ல் 823 ஆகவும், கடந்த நிதியாண்டில் 1,192ஆகவும் அதிகரித்துள்ளது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் தெரிவித்திருந்தார்.