ஊட்டி கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கும் பிகோனிய மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பல வண்ண பிகோனியா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்லும் வகையில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படுகிறது. இந்த மலர் செடிகளில் கோடை சீசனான ஏப்ரல் முதல் மே மாதம் வரையிலும், இரண்டாம்  சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில், பல வகையான மலர்கள் பூத்துக் குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

தற்போது முதல் சீசன் முடிந்த நிலையில், இரண்டாம் சீசனுக்காக பூங்காவில் நாற்று நடவு பணிக்காக பூங்கா தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனால், பூங்காவில் மிகவும் குறைந்தளவே மலர்கள் காணப்படுகிறது. டாப் கார்டன் பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகையில் தற்போது ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பூக்கும் பிகோனியா மலர்கள் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் இந்த மலர்களை கண்டு சுற்றுலா  பயணிகள் ரசித்து செல்கின்றனர். வேறு எங்கும் மலர்கள் இல்லாத நிலையில் இந்த மலர்களை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, அதன் அருகே நின்று புகைப்படங்களையும் எடுத்துச் செல்கின்றனர். இம்மாதம் நடவு பணிகள் முடிந்தால், அதன்பின் செப்டம்பர் மாதம் மட்டுமே பூங்காவில் அனைத்து செடிகளிலும் மலர்களை காண முடியும்.

Related Stories: