போபால்: ‘கழிவறையோ, கழிவுநீர் கால்வாய்களையோ சுத்தம் செய்வதற்காக நான் எம்பி ஆகவில்லை’ என்று பாஜ எம்பி பிரக்யா சிங் தாக்கூர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘ஸ்வச் பாரத்’ என்ற பெயரில் நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தை, பிரதமர் மோடி முன்னெடுத்து வருகிறார். அதன்படி, பாஜ கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர், தூய்மைப் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சாகோர் என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜ எம்பி பிரக்யா சிங் தாக்கூர், ‘‘நான் கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக எம்பி ஆகவில்லை. நாடாளுமன்றத்தில் நேர்மையான எம்பியாக செயல்படவே விரும்புகிறேன்’’ என்று கூறினார்.