×

சென்னையில் எத்தனை நீர்நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளது: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: மழைநீரை சேமிக்கும் சரியான திட்டம் எதுவும் தமிழக அரசிடம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி இயற்கை மற்றும் நீர்வள பாதுகாப்பு சங்கம், சென்னை உயர்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாலாற்றில் இருந்து உதயேந்திரம் ஏரிக்கு நீர்வரத்து கால்வாயில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கால்வாயில் தண்ணீர்  சுலபமாக செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு  உத்தரவிட  வேண்டும் என்று கூறியிருந்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு  வந்தது. அப்போது நீதிபதிகள், சென்னை நகரில் தண்ணீர் பஞ்சம்  தலைவிரித்தாடுகிறது. இந்த தண்ணீர் பஞ்சத்தை  போக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்’ என்று கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு கடந்த ஜூன் 18-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உயர்நீதிமன்றம் கண்டனம்  தெரிவித்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஏரிகளை தூர்வாறவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுத்த நடவடிக்கைகள் என்ன?..இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.மழை நீர் வீணாக கடலில்  கலப்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன?.. இந்த வழக்கில் தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல செய்துள்ளது.

இந்நிலையில், இன்று மழைநீரை சேமிக்கும் சரியான திட்டம் எதுவும் தமிழக அரசிடம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. சென்னையில் பெய்யும் மழை நீர் என்ன ஆகிறது என்று எங்களோடு வந்து ஆய்வு செய்ய  அதிகாரிகள் தயாரா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியாற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் நீதிபதி கூறினார். தேங்கிய மழைநீர்  வடிந்து விட்டதை ஆய்வு செய்ய என்னுடன் அதிகாரிகள் வருவார்களா ? என்றும் மழைநீர் வடிகால் குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை ஏன் நியமிக்க கூடாது ? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சென்னையில் எத்தனை  நீர்நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினர்.


Tags : Chennai, Water Resources, Parks, Government, High Court
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...