காஞ்சிபுரம் : அத்திவரதரை மீண்டும் குளத்திற்கு அடியில் வைக்கக் கூடாது என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜீயர் கோரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்திவரத பெருமாள் பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை அத்திவரதர் தரிசனத்திற்கு கோயில் நிற்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.அந்த வகையில் 1979ம் ஆண்டுக்கு பின்னர் இந்தாண்டு ஜூலை 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். இதனிடையே அத்திவரதர் முதல் 24 நாட்கள் சயனகோலத்திலும் அடுத்த 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதையடுத்து 48 நாட்கள் பூஜைக்கு பிறகு, மீண்டும் அத்திவரதரை குளத்திற்குள் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.