சென்னை: சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுவதாவது; தமிழகத்தில் அனேக இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இடைவெளிவிட்டு இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும். கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி தேவாலாவில் 7 செ.மீ மழை பெய்துள்ளது. தாம்பரத்தில் 5 செ.மீ மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை;
தென் கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடாவுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும் என்று வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் சீற்றம், பலத்த காற்று வீசும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.