புதுடெல்லி: அடுத்த ராணுவ கண்காட்சி, உத்தரப் பிரதேசம் லக்னோவில் நடைபெறும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராணுவ கண்காட்சி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன் 10வது ராணுவ கண்காட்சி சென்னை அருகேயுள்ள திருவிடந்தையில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. 11வது கண்காட்சி உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் அடுத்தாண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராணுவ கண்காட்சி லக்னோவில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இதில் சர்வதேச மற்றும் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஆயுதங்களையும், தயாரிப்பு பொருட்களையும் காட்சிக்கு வைக்கின்றன. இந்தியாவை ராணுவ தளவாட உற்பத்தி மையமாக காட்ட, கடந்த கண்காட்சியில் மத்திய அரசு முயற்சிகள் எடுத்தது. அதேபோல் அடுத்தாண்டு நடைபெறும் ராணுவ கண்காட்சியிலும், இந்திய நிறுவனங்கள் அதிகளவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.