புதுடெல்லி: அலோபதி, ஆயுர்வேத சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் வசதிகள் மற்றும் சேவைகளில் குறைந்தபட்ச தரத்தை நிர்ணயித்து, மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் ஒழுங்குமுறை சட்டத்திருத்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது.‘மருத்துவமனைகள் பதிவு மற்றும் ஒழுங்குமுறை சட்டம்’ கடந்த 2010ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இதன்கீழ், அனைத்து மருத்துவமனைகளும் பதிவு செய்வது கட்டாயம். இச்சட்டத்தில் தற்போது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 3வது முறையாக திருத்தம் செய்து, அதற்கான வரைவு அறிக்கையை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் 43 நாட்களில் கருத்துக்களை தெரிவிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவ பரிசோதனை ஆய்வகங்களுக்கு மட்டுமே இருந்த குறைந்தபட்ச தரம், தற்போது மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மருத்துவமனை கட்டிடம் நோயாளிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், பார்வையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் பாதுகாப்பான இடத்தில் அமைந்திருக்க வேண்டும். சுற்றுப்புறம் சுகாதாரமாக இருத்தல் வேண்டும். போதுமான இடவசதி இருக்க வேண்டும். வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும் முறையான தண்ணீர் வசதியுடனும் கட்டிடம் அமைந்திருக்க வேண்டும்.