வீரர்களின் கவுரவத்துக்கு தீங்கிழைக்க மாட்டேன்: அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

புதுடெல்லி: ‘‘ராணுவ வீரர்களின் புகழுக்கும், கவுரவத்துக்கும் ஒருபோதும் தீங்கு இழைக்க மாட்டேன்,’’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே 60 நாட்கள் நடந்த கார்கில் போர், கடந்த 1999 ஜூலை 26ம் தேதி முடிந்தது. இதில், இந்திய ராணுவம் பெற்ற வெற்றி, கார்கில் வெற்றி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு 20ம் ஆண்டு வெற்றி நினைவு கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, கார்கில் போரில் இன்னுயிரை நீத்த வீரர்களின் விதவை மனைவிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:நமது ராணுவ வீரர்களின் புகழுக்கும், பெயருக்கும் மரியாதைக்கும் ஒரு போதும் தீங்கு இழைக்க மாட்டேன். ஒரு மனிதன் எந்த விஷயத்திலும் சமரசம் செய்து கொள்ளலாம். ஆனால், கவுரவத்தையும், மரியாதையையும் விட்டு கொடுக்க முடியாது.

ஜம்முவில் உள்ள திராஸ் பகுதிக்கு சென்றபோது கார்கில் போர் பற்றி அதிகாரிகள் விரிவாக விளக்கினர். எதிரிகளின் பார்வையில் பட்டால் சுட்டு கொன்று விடுவார்கள் என்பது தெரிந்தும், நமது வீரர்கள் உயரமான மலை உச்சிகளை கடந்து சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்த அசாத்திய துணிச்சல், வீரம், வெல்ல முடியாத அச்சமின்மை ஆகியவற்றை கேட்டு, மெய்சிலிர்த்து போனேன். இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

Related Stories: