சன்மானம் அறிவிக்கப்பட்ட 2 நக்சல்கள் போலீசில் சரண்

தண்டேவாடா: சட்டீஸ்கரில் தலைக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்த நக்சல் உட்பட 2 பேர் போலீசில் சரண் அடைந்தனர். சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா முன்னிலையில் நேற்று முன்தினம் 2 நக்சல்கள் சரண் அடைந்தனர். சரண் அடைந்த நக்சல்களில் ஒருவரான ஹித்மா மாண்டவி கடந்த 2017ம் ஆண்டு மவோயிஸ்ட் சீருடையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

3 மாத சிறை தண்டனைக்கு பின் விடுவிக்கப்பட்ட அவர், மீண்டும் மாவோயிஸ்ட் அமைப்பில் இணைந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதனைதொடர்ந்து அவரது தலைக்கு போலீசார் ₹3 லட்சம் சன்மானம் அறிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் போலீசில் சரண் அடைந்தார். இதேபோல் சரண் அடைந்த மற்றொருவர் குமியாபால் கிராமத்தை சேர்ந்த மங்கு மாண்டவி. மாவோயிஸ்ட் கொள்கை மற்றும் கடுமையான வன வாழ்க்கையால் அதிருப்தி அடைந்ததால் சரண் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

Related Stories: