சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: திமுக ராயபுரம் பகுதி முன்னாள் செயலாளர் கட்பீஸ் பழனி மறைந்த செய்தி கேட்டு வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை ராயபுரம் பகுதியில், மக்கள் மன்ற தலைவராக, பகுதி பிரதிநிதியாக, பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்த அவர் 1997 முதல் 2016 வரை 19 வருடம் ராயபுரம் பகுதி செயலாளராக தீவிரமாக கழகப் பணியாற்றியவர்.
திமுக அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு சிறை சென்றவர். தேர்தல் நேரங்களில் சுறுசுறுப்பாக களத்தில் நின்று திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட்டவர். 2006 முதல் 2011 வரை சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்து மக்கள் தொண்டாற்றி-அப்பகுதி மேம்பாட்டுப் பணிகளிலும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும் மிகுந்த கவனம் செலுத்திய அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்பது மிகுந்த வேதனை தருகிறது. கட்பீஸ் பழனியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.