சென்னை: மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார். சென்னை விமான நிலையத்தில் மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அப்படியென்றால், மத்திய அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். தமிழிசை சோலை வனத்தை பாலைவனமாக்கமாட்டோம் என கூறியிருக்கிறார். ஆனால் நாங்கள் என்ன கூறுகிறோம் என்றால் பெட்ரோலை உணவுக்குப் பதிலாக உண்ண முடியாது. எனவே அடிப்படையில் உணவு பாதுகாப்பு என்பது ஒரு நாட்டுக்கு மிக மிக முக்கியமான ஒன்று. அதனால் தொழில் வளர்ச்சிக்கென தனியே பொருளாதார மண்டலம் இருப்பது போல், விவசாயத்துக்கு என தனியே விவசாய மண்டலம் ஒதுக்கப்பட வேண்டும். விவசாய மண்டலத்தில் மத்திய அரசு கை வைக்கக்கூடாது.