சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயிலில் தினமும் 1 லட்சம் பேர் வரையில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் நிர்வாகம் சிக்கி தவித்து வருகிறது. ஆங்காங்கே மெட்ரோ ரயில் பல மணி நேரம் நிறுத்தி வைப்பது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை நோக்கி சென்ற மெட்ரோ ரயிலின் இன்ஜினில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, சென்ட்ரல் நிலையத்தில் பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு மாற்று ரயிலில் வண்ணாரப்பேட்டை ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால், 2 மணி நேரமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை 8.15 மணியளவில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமானநிலையம் நோக்கி மெட்ரோ ரயில் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அப்போது, தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியபட்டது.