சென்னை: சந்திராயன் -2 விண்ணில் ஏவப்படுவதின் மூலம் சந்திரனை பற்றிய பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று பகல் 12.30 மணி விமானத்தில் பெங்களூருவில் இருந்து சென்னை வந்து காரில் ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டுச்சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி; சந்திரயான் - 2வை 22ம் தேதி பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது. கடந்த 15ம் தேதி இறுதிக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சில தொழில் நுட்பக்கோளாறுகள் சரி செய்யப்பட்டுவிட்டன. எல்லா பணிகளும் முழுமையாக நிறைவடைந்து விண்கலம் சந்திரனை நோக்கி பாய்வதற்கு தயார் நிலையில் உள்ளது. அதற்கான ஒத்திகையும் முடிந்துள்ளது. இன்று (ஞாயிறு) மாலை 6.43 மணிக்கு அதற்கான கவுன்டவுன் தொடங்குகிறது. திங்கள்கிழமை சரியாக பகல் 2.43 மணிக்கு சந்திராயன் -2 விண்ணில் செலுத்தப்படும்.