தமிழகத்தின் கடன் ரூ.3.26 லட்சம் கோடியாக அதிகரிப்பு

* பயன்படுத்தாததால் ரூ. 6 ஆயிரம் கோடி அரசுக்கு திரும்பியது

* இந்திய தணிக்கை துறை அறிக்கையில் தகவல்

சென்னை: தமிழகத்தின் கடன் தொகை ₹3.26 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று இந்திய தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கணக்கெடுப்பு மற்றும் தணிக்கை துறை தலைவரின் 2017-18ம் ஆண்டு நிதிநிலை மீதான தணிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் மொத்த வருவாய் 2017-18ம் நிதி ஆண்டில் ₹1 லட்சத்து 46 ஆயிரத்து 279 கோடியாக இருந்தது. அதில் வருவாய் ₹93 ஆயிரத்து 737 கோடி ஆகும். வருவாய் செலவினம் ₹1 லட்சத்து 67 ஆயிரத்து 873 கோடி. 2016-17 ஆண்டு முடிவில் ₹2 லட்சத்து 83 ஆயிரத்து 394 கோடியாக இருந்த கடன் 2017-18ம் ஆண்டு முடிவில் ₹3 லட்சத்து 26 ஆயிரத்து 518 கோடியாக அதிகரித்துள்ளது. இது 15.22 சதவீதம் அதிகமாகும். வருவாய் செலவீனங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி 2016-17 நிதியாண்டில் ₹11 ஆயிரத்து 216 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு ₹8 ஆயிரத்து 911 கோடியாக குறைந்துள்ளது.உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால் 14வது நிதிக்குழு ஆணைய பரிந்துரைகளின் படி மத்திய அரசிடம் இருந்து ஊராட்சி அமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியங்கள் பெற முடியாததால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதி குறைந்துள்ளது. 2012-17 வரையிலான அமைப்புகளுக்கு தொடர்புடைய மிகை செலவினமான ₹1099 கோடியே 58 லட்சம் சட்டசபையில் முறைப்படுத்தப்படவில்லை.  அனைவருக்கும் கல்வித் திட்டம், இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டம் போன்றவற்றின் கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்த ரு.1627 கோடி நிதி உபயோகப்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், ஒப்பந்தப்புள்ளிகள் முடிக்கப்படாததன் காரணமாக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் ₹1022 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவிரிபாசன பகுதியில் தட்பவெட்ப நிலை மாறுதலால் ஏற்படும் தாக்குதலை மட்டுப்படுத்தும் திட்டம், தமிழ்நாடு நவீன பாசன வேளாண்மை திட்டம், நீர் பாசன கட்டமைப்புகளை புதுப்பித்தல், நீர்வள மேலாண்மை குழு குடி மராமத்து மற்றும் மறு சீரமைப்பு பணிகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அணைகளை புனரமைத்தல் திட்டங்கள் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்த நிதி பயன்படுத்தப்படாததால் ₹1,729 கோடி திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின்சார வாரிய மூலதன நிதியின் கீழ் கடலோர பேரிடர் துயர் தணிப்பு திட்டத்தின் மூலம் புயலால் பாதிக்கப்படாத மின் இணைப்பு அமைத்தல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த நிதிகள் பயன்படுத்தப்படாததால் ₹1493 கோடி நிதி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியின்படி அரசில் ₹1276 கோடியே 27 லட்சம் முதலீடு செய்யப்பட்ட சாலைகள், பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான 134 திட்டமிட்ட நிறைவு தேதிக்கு பிறகும் முடியாமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 2015-16ம் நிதி ஆண்டில் ₹6 ஆயிரத்து 156 கோடியாக இருந்த திருமண உதவி திட்டம், இலவச மடிக்கணினி மற்றும் சீருடை வழங்குதல் போன்ற இலவச திட்டங்களின் மதிப்பு கடந்த 2017-18 நிதியாண்டில் ₹4 ஆயிரத்து 433 கோடியாக குறைந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: