மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் உள்ள தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க தேர்தலில் பதிவான வாக்குசீட்டுகளை மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டுவெந்நியில் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது. இதையடுத்து இன்னும் இரு தினங்களில், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர். சங்க அலுவலகத்தில் முஞ்சிறையை சேர்ந்த கனகராஜ் (58) என்பவர் காவலாளியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவும் பணியில் இருந்தார். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் 4 பேர் வந்தனர். அலுவலக வாசல் அருகே உள்ள ஒரு அறையில் இருந்த கனகராஜின், பின்புறமாக சென்று அவரது கண்கள் மற்றும் வாயை துணியால் கட்டி தாக்கினர். பின்னர் அவரை அலுவலகத்தின் பின்னால் உள்ள மரத்தில் கட்டி வைத்தனர்.