எய்ம்ஸ்க்கான இடத்தை இன்னும் முழுமையாக ஒப்படைக்கவில்லை: தமிழக அரசு மீது வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டு

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை, தமிழக அரசு முழுமையாக ஒப்படைக்கவில்லை என சு.வெங்கடேசன் எம்பி குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 18வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்ட  நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்பி சு.வெங்கடேசன் மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்தினார்.  பின்பு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை இருமுறை சந்தித்து வலியுறுத்தினேன். 3 ஆண்டுகளில் நிச்சயம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என உறுதியளித்தார்.

ஆனால், தமிழக அரசு நிலத்தை ஒப்படைக்கும் பணி இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. விரைந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்.  கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் குறித்து அடுத்த வாரம் பார்வையிட உள்ளேன். மதுரையை சுற்றி நரசிங்கம்பட்டி போன்ற பரந்து புதைந்து கிடக்கின்ற பல்வேறு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள தேவையான முயற்சிகளை வருங்காலங்களில் எடுப்போம்’’’ என்றார்.

Related Stories: