மயிலாடுதுறையை மாவட்ட தலைநகராக்க கோரி குத்தாலத்தில் 3வது நாளாக கடையடைப்பு: பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க கோரி குத்தாலத்தில் 3வது நாளாக கடையடைப்பு போராட்டம் நடந்தது. மனிதசங்கலி போராட்டத்தை பொதுமக்கள் நடத்தினர். தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் உதயமாகும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பினால் மயிலாடுதுறை பகுதி மக்கள் ஏமாற்றமடைந்தனர். ஏனெனில், மயிலாடுதுறையில் இருந்து தலைநகர் நாகப்பட்டினத்துக்கு செல்லவேண்டுமென்றால் காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களை சுற்றிகொண்டு சுமார் 90 கி.மீ. தூரம் பயணிக்கவேண்டி உள்ளது. இதனால், மயிலாடுதுறையை தனியாக பிரித்து புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று 20 ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், முதல்வர் அறிவிப்பு ஏமாற்றமளித்தது. இதை கண்டித்தும், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரியும் அனைத்து அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கங்கள் சார்பில் நாகை மாவட்டத்தில் 19ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடந்தது. 3வது நாளாக குத்தாலம்  தாலுகாவில் வர்த்தக சங்கத்தினர் நேற்று தங்களது வணிக நிறுவனங்களை மூடி  போராட்டத்தை தொடர்ந்தனர். கோமல்,  மங்கைநல்லூர், திருவாலங்காடு, திருவாவடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் கடைகளை  அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குத்தாலத்தில் மனித சங்கிலி  போராட்டம் நடைபெற்றது. கடைவீதியில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள்  கைகோர்த்து மனித சங்கிலி அமைத்து மாவட்டத் தலைநகராக மயிலாடுதுறையை அறிவிக்க  முழக்கங்களை எழுப்பினர்.

Related Stories: