மன அழுத்தம் பற்றி நடித்து கொண்டிருந்தபோது நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் மேடையில் சுருண்டு விழுந்து சாவு: 36 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபம்

துபாய்: இந்தியாவைச் சேர்ந்த நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் நாயுடு, துபாயில் நடந்த நிகழ்ச்சியில் சுருண்டு விழுந்து பலியானார்.இந்தியாவைச் சேர்ந்த நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் நாயுடு (36). மேடைகளில் ‘ஸ்டேண்ட் அப் காமெடி’ எனப்படும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி  புகழ் பெற்றவர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அபுதாபி நகரில் பிறந்த இவர், பின்பு துபாயில் குடியேறினார். துபாயில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் இவர் பேசிக் கொண்டிருந்தார். தனது குடும்பத்தை பற்றி கூறிக் கொண்டிருந்த இவர், மன அழுத்தம் காரணமாகதான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன் என்பதை நகைச்சுவையாக கூறி ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அவர் திடீரென அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார். பிறகு, சுருண்டு தரையில் விழுந்தார். அவர் ஏதோ நடித்துக் காட்டுகிறார் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர் மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே இறந்து விட்டார். அவரை டாக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை. இது பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது.இவருடைய பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டனர். இவருக்கு ஒரு அண்ணன் மட்டுமே இருக்கிறார். துபாயில் வேறு உறவினர்கள் கிடையாது. துபாயில் தனது நகைச்சுவையால் மிகவும் பிரபலமாக விளங்கிய இவரை ரசிகர்கள் அன்போடு, ‘மேங்கோ’ என்று அழைப்பார்கள்.

Related Stories: