புதுடெல்லி: ‘‘ஒரே ஒரு கட்சிக்கே 90 சதவீத தேர்தல் நிதி செல்கிறது. எனவே, தேசிய தேர்தல் நிதி திட்டம் பற்றி ஆலோசித்து, அதை அமல்படுத்த வேண்டியது அவசியமாகி இருக்கிறது,’’ என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.கடந்த சில ஆண்டாக, மத்தியில் ஆளும் பாஜ கட்சியின் தேர்தல் நன்கொடை நிதி கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்தாண்டு புள்ளி விவரத்தின்படி, 017-18ல் 6 தேசிய கட்சிகள் பெற்ற ஒட்டுமொத்த தேர்தல் நிதியை போல், பாஜ.வுக்கு 13 மடங்கு அதிகமாக நன்கொடை கிடைத்துள்ளது. இந்த காலக்கட்டத்தில், பிரதான கட்சிகள் பெற்ற மொத்த தேர்தல் நிதி ரூ.469.89 கோடி. இதில், காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய தேசிய அந்தஸ்து பெற்ற 6 கட்சிகள் பெற்ற மொத்த தேர்தல் நிதி ரூ.3.83 கோடி மட்டுமே. ஆனால், பாஜ.வுக்கு மட்டும் ரூ.437.04 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நிதி பத்திரம் அறிமுகத்தால் அதிக பலனை அடைந்திருப்பது பாஜ மட்டுமே. பெரிய நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளித்த ரூ.985.1 கோடி நிதியில், பாஜ.வுக்கு மட்டுமே ரூ.915.5 கோடி கிடைத்துள்ளது. காங்கிரஸ் ரூ.55.3 கோடியை மட்டுமே பெற்றுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.