குடியாத்தம்: குடியாத்தம் அருகே வீணாகும் மழைநீரை கால்வாய் வெட்டி கிணற்றில் சேகரித்து நிலத்தடி நீரை உயர்த்தும் புதிய முயற்சியில் கிராம மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். வேலூர் மாவட்டத்தில், வேலூர் அடுத்த கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் நாகநதி புனரமைப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் வேலை செய்யும் பெண்களை வைத்தே நிலத்தடி நீர் செறிவூட்டம் திட்டம் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தால் அந்த பகுதியில் பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த விவசாய கிணறுகள் மற்றும் போர்வெல்களில் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது. மேலும் இந்தாண்டு வறட்சியிலும் நிலத்தடிநீர் மட்டம் குறையாமல் இருந்தது. இந்த திட்டத்தை பிரதமர் மோடியே பாராட்டினார். இதனால் அனைவரின் கவனமும் வேலூர் பக்கம் திரும்பியது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொல்லகுப்பம் கிராமத்தில் புதிய முறையில் கிணற்றில் மழைநீரை சேமித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இரு தெருக்கள் மட்டுமே உள்ளது. 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடிநீர் தேவைக்காக 5க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்திருந்தனர். அவை அனைத்தும் வறண்டு விட்டது.