உணவுக்கான உயிரினங்களுக்கு வழங்கும் நோய் தடுப்பு மருந்துகளின் விற்பனை, உற்பத்திக்கு தடை: மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடி

புதுடெல்லி: உணவுக்காக வளர்க்கப்படும் உயிரினங்களுக்காக ‘கொலிஸ்டின்’ நோய் தடுப்பு மருந்து விற்பனை, உற்பத்திக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.உணவுக்காக வளர்க்கப்படும் கால்நடைகள், பறவைகள் போன்றவற்றுக்கு நோய் தாக்குதலை தடுக்க, நோய் தடுப்பு மருந்துகளும், எதிர்ப்பு சக்தி மருந்துகளும் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, கறிக் கோழிகளுக்கு ‘கொலிஸ்டின்’ போன்ற நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன.  இந்த சூழ்நிலையில், உணவுக்காக வளர்க்கப்படும் கோழிகள், மீன்கள், கால்நடைகள் போன்றவற்றுக்கு வழங்கப்படும், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எதிர்ப்பு சக்தி மருந்துகள், கொலிஸ்டின் மற்றும் இவை கலந்த மருந்துகளை விற்பனை செய்வதற்கும், உற்பத்தி மற்றும் விநியோகம் செய்வதற்கும் மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

 மருந்து தொழில்நுட்ப ஆலோசனை அமைப்பின் பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நோய் தடுப்பு மருந்துகள் விலங்குகள் மற்றும் அவற்றின் தீவனங்களில் கலக்கப்படுவதால், இவற்றை உண்ணும் மக்களுக்கு உடல் நல பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கண்ட மருந்து உற்பத்தி செய்பவர்கள், இந்த மருந்து பொருள் பேக்கிங்குகள் மீது ‘இந்த மருந்துகளை உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகளுக்கு பயன்படுத்தக் கூடாது’ என்ற லேபிள் ஒட்ட வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது.

Related Stories: