வீணாகும் மழைநீரை புதிய வடிவில் சேகரிக்கும் கிராம மக்கள்

* வறண்ட கிணற்றில் நீர் நிரம்பியது

* குடியாத்தம் அருகே புதிய முயற்சி

குடியாத்தம் :  குடியாத்தம் அருகே வீணாகும் வெளியேறும் மழைநீரை புதிய வடிவில் கிராம மக்கள் சேகரித்து வரும் சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் இந்தாண்டும் கோடைக்காலத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமலும், விவசாயம் செய்ய முடியாமலும் பெரும் அவதிக்கு ஆளாகினர். அப்போது தான் மழைநீரின் சேகரிப்பின் அருமை பலருக்கும் புரிந்தது. மழைநீர் சேகரிப்பு திட்டங்களை மேற்கொண்டு வந்த பகுதிகளில் வறட்சியிலும் நீலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருந்தது. இதனால் பலரும் மழைநீர் சேகரிப்பு திட்டங்களை மேம்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது, வேலூர் அடுத்த கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில்  நாகநதி புனரமைப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் வேலை செய்யும் பெண்களை வைத்தே நிலத்தடி நீர் செறிவூட்டம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தால் அந்த பகுதியில் பல ஆண்டுகளாக வறட்சியால் வறண்டு கிடந்த விவசாய கிணறுகள் மற்றும் போர்வெல்களில் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது.

மேலும் இந்தாண்டு வறட்சியிலும் கிணற்றிலும் போர்வெல்லிலும் நிலத்தடிநீர் மட்டம் குறையாமல் இருந்தது. இந்த திட்டத்தை பிரதமர் மோடியே பாராட்டினார். இதனால் அனைவரின் கவனமும் வேலூர் பக்கம் திரும்பியது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொல்லகுப்பம் கிராமத்தில் புதிய முறையில் கிணற்றில்  மழைநீரை சேமித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இரு தெருக்கள் மட்டுமே உள்ளது. 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு குடிநீர் தேவைக்காக 5க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்தனர்.

அதில் 3 ஆழ்துளை கிணறுகளில் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரின்றி வறண்டுள்ளது. மீதமுள்ள 2 ஆழ்துளைக் கிணறுகளிலும் கடந்த சில மாதங்களாக தண்ணீர் இன்றி பாழடைந்து கிடக்கிறது. இதனால் அந்த கிராமப்பகுதி மக்கள், அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து குடிநீரை கொண்டு வந்து பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். குடிநீருக்காக கடுமையாக பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று கருதினர்.

அதன்படி இளைஞர்கள், பெண்கள், ஊர் பெரியவர்கள் ஒருங்கிணைந்து, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செய்ய வேண்டும் என முடிவு செய்தனர். அவ்வப்போது பெய்யும் மழை நீரையும் இனி வரும் காலங்களில் சேமித்து வைப்பது என்று முடிவு செய்தனர். அதற்காக இளைஞர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் கிராமத்தின் தெருக்களில் ஒருபக்கம் மழைநீர் கால்வாய்கள் தோண்டினர். பின்னர் கிராமத்திற்கு அருகிலுள்ள பயன்படாமல் வறண்டு கிடந்த 100 அடி ஆழமுள்ள கிணற்றுக்கு பக்கத்தில் பெரிய பள்ளம் தோண்டினர். அதில் ஜல்லி கற்கள், மணல் கொட்டி நிரப்பி வைத்தனர்.

பின்னர் மழைநீரை அந்த பள்ளத்தில் வந்து விழச்செய்து செறிவூட்டி அங்கிருந்து பைப் மூலம் கிணற்றுக்குள் மழைநீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்தனர். இதனால் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தண்ணீர் வீணாகாமல் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய்களில் சென்று கிணற்றில் சேர்ந்தது. இதன் மூலம் 100 அடி கிணற்றில் 80 அடி வரை நீர் நிரம்பிவிட்டது. தற்போது 20 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது. 60 அடி நீரை பூமி உறிஞ்சி விட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த மழைநீர் சேகரிப்பு பணியால் அருகில் இருக்கும் விவசாய ஆழ்துளை கிணறுகளில் தற்போது தண்ணீர் சற்று அதிகரித்துள்ளது.

மேலும் பயன்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணறுகளிலும் தற்போது தண்ணீர் வர தொடங்கி உள்ளது. நாங்கள் அமைத்த இந்த மழைநீர் சேகரிப்பால் தற்போது கிராமத்திற்கு எப்போதுமே குடிநீர் பஞ்சம் வராது. இதனால் விவசாயம் செழிக்கும். இதேபோல் மற்ற பகுதிகளிலும் இளைஞர்கள் முயற்சி செய்ய வேண்டும்’ என்றனர். இந்த மழைநீர் திட்டம் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: