தென்காசி: குற்றாலத்தில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு காரணமாக மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை முதல் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றாலத்தில் கடந்த 3 நாட்களாக ஓரளவு சாரல் நன்றாக பெய்து வந்தது. நேற்று முன்தினம் பகல் முழுவதும் பெய்த சாரல் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியிலும் 5 பிரிவுகளிலும் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டியது. இரவில் பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் அதிகமாக வந்ததால் 3 அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.