கொங்கணாபுரம் சந்தையில் ஆடு விற்பனை களை கட்டியது: ஒரே நாளில் ரூ.2.70 கோடிக்கு வர்த்தகம்

இடைப்பாடி: கொங்கணாபுரம் சந்தையில் நேற்று ஆடு விற்பனை களை கட்டியது. ஒரே நாளில் ரூ.2.70 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் நேற்று சனி சந்தை கூடியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 8000 ஆடுகள், 700 பந்தய சேவல்கள், 1800  கோழிகள், 92 டன் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். மாவட்டத்தில் ஆடி பண்டிகை தொடங்கியுள்ளதால், ஆடு விற்பனை சூடு பிடித்தது.

10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.4,500 முதல் ரூ.5,600 வரையும், 20 கிலோ எடையுள்ள ஆடு ரூ.9,000 முதல் ரூ.11,000 வரையும், வளர்ப்பு குட்டி ஆடு ரூ.1050 முதல் ரூ.1350 வரையும் விலைபோனது. பந்தய சேவல் அதன் திறன் பொருத்து, ரூ.800 முதல் ரூ.3,000 வரையும் விற்பனை செய்யப்பட்டது. மற்ற கோழி வகைகள் ரூ.100 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகளை பொருத்தமட்டில் தக்காளி 27 கிலோ பெட்டி ரூ.600 முதல் ரூ.850 வரையும், பீன்ஸ் கிலோ ரூ.50, கேரட் ₹40, முட்டைகோஸ் ரூ.25, முள்ளங்கி ரூ.20, பீட்ரூட் ரூ.25 முதல் ரூ.30 வரையும், வெண்டைக்காய் ரூ.20, கத்தரிக்காய் ரூ.17 முதல் ரூ.25 வரையும், இஞ்சி ரூ.120 முதல் ரூ.200 வரையிலும், மிளகாய் ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்க அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்ததால், சந்தையில் கூட்டம் அலைமோதியது. நேற்று கூடிய சந்தையில் ரூ.2.70 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: