புதுடெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா பொறுப்பேற்க உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சுதாகர் ரெட்டி கடந்த 2012ம் ஆண்டு பொறுப்பேற்றார். 3வது முறையாக இந்த பதவியில் இருந்து வந்த அவர், தனது உடல் நிலையை காரணம் காட்டி, கட்சி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் கடந்த 2 நாட்களாக டெல்லியில் நடந்தது. இதில், பொதுச் செயலாளர் பதவிக்கு, மாநிலங்களவை எம்பி.யாக உள்ள டி.ராஜாவின் பெயர் ஒரு மனதாக முன்மொழியப்பட்டது. இதையடுத்து, அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்க உள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால், கட்சி தலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.