ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு கழுத்து, மர்ம உறுப்பு அறுத்து வாலிபர் கொடூர கொலை: கள்ளத்தொடர்பா என காவல் துறை விசாரணை

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே முட்புதரில் கழுத்து, மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு வாலிபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த பெரும்புதூர் அருகே வெங்காடு கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்றபோது அங்குள்ள முட்புதரில் ரத்த காயங்களுடன் ஒருவர் இருப்பதை பார்த்தனர். இது குறித்து கிராம மக்கள் உடனே பெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இறந்து கிடந்த நபரின் சடலத்தை பார்த்தனர். கொலை செய்யப்பட்டு இருந்தவர் சிவப்பு கட்டம் போட்ட சட்டையும், நீல நிற லுங்கியும் அணிந்திருந்தார். அவரது கழுத்து, மர்ம உறுப்பு அறுக்கப்பட்டிருந்தது. கை, உடல் பகுதியில் சரமாரியாக வெட்டு காயங்கள் இருந்தது. வயிற்றில் கத்திக்குத்து கத்தியால் குத்திய காயமும் காணப்பட்டது.

இதுகுறித்து வெங்காடு விஏஓ மெர்சி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையானவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. காரணம் வெங்காடு பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு, வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களில் யாராவது இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. எனினும் அவரது போட்டோ அருகில் உள்ள ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போனவர்களின் பட்டியலை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் கேட்டுள்ளனர். குறிப்பாக இறந்த நபரின் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டிருப்பதாலும் கொடூர முறையில் இறந்துள்ளதாலும் இதற்கு கள்ளத்தொடர்பு காரணமாக இருக்கலாமா என்றும் அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் வேறு இடத்தில் கொலை செய்து விட்டு, வாகனத்தில் இங்கே கொண்டு வந்து வீசி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். ஏனென்றால் கொலை நடந்த இடத்தில் ரத்தக்கறையோ அல்லது வேறு எந்த ஒரு அடையாளமோ இல்லை. கொலையானவரை பற்றிய விவரம் தெரிந்தால்தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Related Stories: