சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கார் டிரைவராக உள்ளவரின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் கார் டிரைவராக இருந்து வருபவர் பாஸ்கரன். இவர், சைதாப்பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் செளமியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தூங்க சென்ற சௌமியா நேற்று காலை வெகு நேரமாகியும் எழுந்து வராததால் வீட்டில் உள்ளவர்கள் அவரது அறை கதவை தட்டி எழுப்ப முயற்சித்துள்ளனர். நீண்ட நேரம் கதவு தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.