சென்னை: பொதுத்துறை, நிதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: 2017ம் ஆண்டு ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு பிறகு, மாநில அரசுகளின் வரி விதிப்பு அதிகாரங்கள் மேலும் குறைந்துள்ளது. இந்த வகையில் மத்திய அரசிடமிருந்து 7,517 கோடி ரூபாய் பெற வேண்டியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஆண்டு ஒன்றிற்கு சுமார் 30,000 கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை இதன் விளைவாக ஏற்பட்டுள்ளது. செலவினங்களை பொறுத்தவரை மத்திய அரசின் உதய் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் கடனான 22,815 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு தனது கடனாக ஏற்றுக்கொண்டதன் விளைவாக, தமிழ்நாடு அரசின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான கடும் நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும், தமிழ்நாடு அரசு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அரசு ஆண்டுக்கு 14,719 கோடி அளவிற்கு கூடுதல் செலவினத்தை ஏற்றுள்ளது.