நீர் நிலைகளில் கூடுதல் தண்ணீரை சேமிக்க 1,250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: ஊரக பகுதிகளில் உள்ள நீர் நிலைகளின் கொள்ளவை அதிகரிக்க ரூ.1250 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:

மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும், வரும் காலங்களில் இது போன்ற பற்றாக்குறை ஏற்படாமல் நீர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தீவிர நீர் வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் மக்கள் இயக்கமாக தொடங்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த மக்கள் இயக்கத்தில், மழை நீர் சேகரித்தல், நீர் நிலைகளைப் பாதுகாத்து அதன் கொள்திறனை அதிகரித்தல், நிலத்தடி நீரை செறிவூட்டி, குடிநீர் வழங்குதலை நிலைப்படுத்துதல்.

வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பதோடு, மானாவாரி வேளாண்மைக்காக மழை நீர் சேகரிக்கும் திட்டத்தையும் செயல்படுத்துதல், பயன்படுத்தப்பட்ட நீரினை மறுசுழற்சி செய்து உபயோகப்படுத்துவதன் மூலம் நன்னீருக்கான தேவையை குறைத்தல். இதன் மூலம் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி கோட்பாட்டினை தீவிரமாக கடைபிடித்தல். ஆறுகள், முக்கிய கடற்கரை பகுதிகள், முகத்துவார நீர்நிலைகள், கழிமுகங்கள், சிற்றோடைகள் மற்றும் சதுப்பு நிலங்களின் சூழலியலை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இத்திட்டம் மாவட்ட அளவில் மாவட்ட கலெக்டர்கள் தலைமையேற்று, அவர்கள் கீழ் உள்ள பலதரப்பட்ட துறைகளின் உதவியுடன் செயல்படுத்தப்படும். கீழ்மட்டத்தில் நகர்ப் பகுதிகளில் வார்டு வாரியாகவும், கிராமத்திலும், ஒன்றியத்திலும் நீர்ப் பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட்டு, அவற்றில் பெண்கள் பெருவாரியாக கலந்துகொண்டு செயல்படுவதை இத்திட்டம் உறுதி செய்யும். ஒரு சிறப்பு முயற்சியாக, இந்த நீர்வள பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒரு தீவிர பிரச்சார இயக்கம் 2019, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கி ஒருமாத காலத்திற்கு செயல்படுத்தப்படும்.

இந்த இயக்கத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி, பொது மக்களின் பங்களிப்பு, அரசுசாரா நிறுவனங்கள், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோரின் பங்களிப்பு திரட்டப்பட்டு, மக்கள் இயக்கமாக இந்த இயக்கம் செயல்படுத்தப்படும். இந்த தீவிர இயக்கத்தின் மூலம் பருவமழை காலத்திற்கு முன்பு நீர்நிலைகளை மேம்படுத்தி, அதிக அளவு மழை நீரை சேமிக்க வழி வகை செய்யப்படும். குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், 2019-20ல் 499.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள 1829 பணிகளும், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டின் ஒரு பகுதியாக, காவேரி டெல்டா பகுதியில் உள்ள கால்வாய்களை சீரமைக்க 61.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ள பணிகளும், இந்த தீவிர இயக்கத்தில் முக்கிய பணிகளாக செயல்படுத்தப்படும்.

இத்தீவிர பிரச்சார இயக்கத்தின்போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் கிராமம் தோறும் சிறுபாசன ஏரிகள், குட்டைகள் மற்றும் ஊருணிகள் போன்ற நீர்நிலைகளின் கொள்ளளவினை அதிகரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதி 750 கோடி ரூபாயுடன், கூடுதலாக சிறப்பு நிதியாக 500 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு வழங்கி, மொத்தம் 1,250 கோடி ரூபாய் நிதி இப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

சென்னையில் உள்ள 210 நீர்நிலைகளில், 114 நீர்நிலைகளில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்தீவிர இயக்கத்தை செயல்படுத்தும் வகையில், இப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இயக்கத்தின் மூலம், மழைக்காலங்களில் உபரி நீர் மற்றும் வெள்ளநீரினை சேகரிக்கும் திட்டங்களை தொடர்ந்து கண்டறிந்து செயல்படுத்துதல். கோதாவரி - காவேரி ஆறுகளை இணைக்க மத்திய அரசுடன் தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும். நிலத்தடி நீர் செறிவூட்டும் திறனை மேம்படுத்துவதற்காக, குறிப்பாக அதிநுகர்வு மற்றும் அபாயகரமான குறுவட்டங்களில், பாசன முறைசார் மற்றும் பாசன முறைசாரா ஏரிகள், தடுப்பணைகள், பாசன கட்டுமானங்கள் ஏற்படுத்தும் திட்டங்கள் தீட்டி செயல்படுத்துதல்.

வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளின் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் மானாவாரி வேளாண்மைக்காக நீர் சேகரிப்புத் திட்டம் போன்றவை ஊக்கப்படுத்தப்படும். கழிவுநீரை மறு சுழற்சி செய்து மறுபயன்பாடு செய்வதன் மூலம், நன்னீருக்கான தேவையை குறைக்கப்படும்.இந்த நீர் வள பாதுகாப்பு இயக்கத்தில் மிகப் பெரிய அளவில் பொது மக்களும், இளைஞர்களும், தனியார் நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களும் மற்றும் தொழில் நிறுவனங்களும் முனைப்புடன் பங்கேற்று, மாநிலத்தின் ஒட்டு மொத்த நலனை பாதுகாக்க தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கழிவுநீரை சுத்திகரிக்க திட்டம்:

முதல்வர் மேலும் கூறுகையில், “தற்போது சென்னை மாநகரில், பெறப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு, விடுவிக்கப்படும் நீரின் அளவு நாளொன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் ஆகும். மேலும், நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கொள்ளளவுடன் தொழிற்சாலை மற்றும் பிற பயன்பாடுகளுக்கு நீர் வழங்க இரண்டு, மூன்றாம் நிலை எதிர் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை முன்னெடுத்துச் செல்ல, 1,700 கோடி ரூபாய் அளவிலான திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 360 மில்லியன் லிட்டர் கழிவு நீரை நவீன தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி சுத்திகரித்து அதன்மூலம் நாளொன்றுக்கு பெறப்படும் 260 மில்லியன் லிட்டர் நீரை தொழிற்சாலை பயன்பாடு மற்றும் நிலத்தடி நீரை செறிவூட்ட ஏரிகளில் நிரப்புதல் செய்யப்படும்” என்றார்.

ஆறுகளை காப்பாற்ற புதிய நடவடிக்கை:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ‘‘ஒரு முக்கிய திட்டமாக, காவேரி ஆறு மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க, ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற திட்டத்தினை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒரு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதே போன்று, பவானி, வைகை, அமராவதி மற்றும் தாமிரபரணி ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

Related Stories: