×

வீரபாண்டியில் நாளை 25 ஆயிரம் அமமுகவினர் திமுகவில் இணையும் விழா: மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்

தேனி: தேனி  அருகே வீரபாண்டியில் 25 ஆயிரம் அமமுகவினர், திமுகவில் இணையும் விழா நாளை  பிரமாண்டமாக நடக்க உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள இந்த  விழாவுக்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. அமமுக கொள்கை  பரப்பு செயலாளராக இருந்த தங்கத்தமிழ்செல்வன் சமீபத்தில் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவரது ஏற்பாட்டின்பேரில்  தேனி மாவட்ட அமமுகவினர் திமுகவில் இணையும் விழா நாளை (ஜூலை 21)  நடைபெறுகிறது. இதற்காக தேனி அருகே வீரபாண்டியில் தேனி - கம்பம் சாலையில்  தனியார் கல்லூரி எதிரே பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து  வருகிறது.

விழாவில் அமமுகவில் இருந்து 25 ஆயிரம் பேர் விலகி திமுகவில் இணைய  உள்ளதாக தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். விழாவிற்கு திமுக  மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார்.  தங்கதமிழ்ச்செல்வன் முன்னிலை வகிக்கிறார். இவ்விழாவிற்காக நாளை நண்பகல்  தேனி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாலை 4 மணிக்கு விழாவிற்கு வந்து  சிறப்புரையாற்ற உள்ளார். இவ்விழாவில் திமுக துணை பொதுச்செயலாளர்  ஐ.பெரியசாமி மற்றும் திமுக முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். சுமார்  50 ஆயிரம் தொண்டர்கள் கூட உள்ளதால் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து  வருகின்றன.

Tags : Veerapandi, Amukam, DMK, Joining Ceremony
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...