கடையம் பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் பஸ்கள்: பயணிகள் ஏமாற்றம்

கடையம்: கடையம் பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் அரசு பஸ்களால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மதுரையில் இருந்து அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் பாபநாசத்திற்கு தென்காசி, கடையம் வழியாக இயக்கப்படுகின்றன. தென்காசி- பாபநாசத்திற்கு மத்தியில் உள்ள ஒரே பெரிய ஊர் கடையம். இங்கிருந்து வியாபார நிமித்தமாகவும், வேலை நிமித்தமாகவும், மதுரையில் சிகிச்சை உள்ளிட்டவற்றிற்காகவும் தினமும் கடையத்தில் இருந்து ஏராளமான பயணிகள் இந்த பஸ் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் மதுரை அரசு போக்குவரத்து கழக பஸ்கள் கடையம் பஸ் நிலையத்திற்குள் வராமலேயே புறக்கணித்து மெயின்ரோடு வழியாக வேகமாக சென்றுவிடுகின்றன. இதனால் பயணிகள் பரிதவிக்கின்றனர். பஸ்கள் உள்ளே வரும் என பஸ் நிலையத்திற்குள் காத்திருக்கும் வெளியூர் பயணிகளும் ஏமாற்றமடைந்து அலைக்கழிக்கப்படுகின்றனர். பல முறை இதுபற்றி புகார் தெரிவித்தும் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியும் இதே நிலை தொடர்ந்தால் பஸ்களை மறித்து சிறைபிடிக்கும் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: