×

தமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: சபாநாயகர் தனபால் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த ஜூன் 28 ஆம் தேதி தொடங்கியது. 16 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. ஜுலை 30 வரை பேரவை கூட்டம் நடைபெற திட்டமிட்டிருந்த நிலையில் வேலூர் தேர்தல் காரணமாக முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறித்தும் மானிய கோரிக்கைகள் குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன. மேலும் முதலமைச்சர் 110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார்.

குறிப்பாக காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும், நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் அறிவித்தார். எதிர்கட்சியை பொறுத்தவரை பல்வேறு கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டுவந்தது. அதற்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

சட்டமன்ற கூட்டத்தில் 129 பேர் மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசியுள்ளனர், சட்டமன்ற உறுப்பினர்களில் 94 பேர் அனைத்து நாள்களும் அவைக்கு வந்தனர் என சபாநாயகர் தகவல் தெரிவித்துள்ளார்.   தற்போது சட்டப்பேரவை முடிவடைந்துள்ளது. தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu Assembly, Adjournment, Speaker Thanapal
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்