சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் அதிகாரி செந்தில்நாதனை மாற்றும் கோரிக்கையை பரிசீலிக்குமாறு தொழிலாளர் ஆணையருக்கு உத்தரவிடக்கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை ஜூலை 14ம் தேதி நடத்துவதென ஜூன் 10ம் தேதி நடந்த பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. பின்னர் தேர்தல் ஜூலை 21ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதற்கிடையில், தேர்தல் அதிகாரியான வக்கீல் அ.செந்தில்நாதனை மாற்ற வேண்டுமென திரைப்பட இயக்குனர் ஜெகநாத் என்கிற கே.பி.ஜெகன் தொழிலாளர் ஆணையர் மற்றும் இணை ஆணையரிடம் ஜூலை 17ம் தேதி புகார் கொடுத்தார்.