×

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு 560 புள்ளிகள் சரிந்தது.  அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை நீடித்து வருகிறது. இதனால் வட்டியை குறைக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், வட்டி குறைப்பு குறித்து சாதகமான முடிவை அந்நாட்டு பெடரல் ரிசர்வ் எடுக்கவில். இந்நிலையில், வட்டி விகிதத்தை குறைக்க இருப்பதை பெடரல் தலைவர் உறுதிப்படுத்தியதால், சர்வதேச சந்தைகள் சற்று ஏற்றம் கண்டன. இருப்பினும், இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று எதிர்மறையான போக்கு காணப்பட்டது. பட்ஜெட்டில் கூடுதல் வரி விதிப்பு அறிவிப்பை தொடர்ந்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து பங்குகளை விலக்கிக் கொண்டுள்ளனர். தொடர்ந்து 13வது நாளாக பங்கு முதலீடுகளை விலக்கினர்.

இதுபோல், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளில் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லாததும் பங்கு முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதுமட்டுமின்றி, ஆசிய வளர்ச்சி வங்கி நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் என்று கணித்துள்ளது. ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதை விட இது குறைவு. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளில் பங்கு மதிப்புகள் சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 560.45 புள்ளிகள் சரிந்து, 38,337.01 ஆக இருந்தது. இதில் பட்டியலிடப்பட்டுள்ள 30 பங்குகளில் 26 பங்குகளின் மதிப்பு குறைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 177.65 புள்ளிகள் சரிந்து 11,419.25 ஆக இருந்தது. வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவன பங்குகள் மதிப்பு கணிசமாக குறைந்தது.

Tags : stock,market, falling
× RELATED காரில் ரூ.11 லட்சம் சிக்கிய விவகாரம்:...