விருத்தாசலம் அருகே காதல் ஜோடி மாயம் காதலனின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்குதல்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே காதலர்கள் ஓடிப்போனதால் காதலனின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி செல்வி (45). இவர்களது மகன் பெரியசாமி (25) என்பவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரான கொளஞ்சி மகள் பவுலியா (23) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு பவுலியாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில் பெரியசாமி பவுலியாவை அழைத்துக்கொண்டு வெளியூர் சென்றுவிட்டார். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு விருத்தாசலம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கொளஞ்சி பெரியசாமியிடம் தனது பெண்ணை கொண்டு வந்து விட்டு விடுமாறும், எனக்கு அசிங்கமாக உள்ளது. உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று பெண்ணின் தந்தை பேசியுள்ளார். அதன்பிறகு இருவருக்கும் செல்போனிலேயே பிரச்னை ஏற்பட்டுள்ளது. பிறகு நீ என் பெண்ணை கொண்டு வரவில்லை என்றால் உனது தாயை தான் கேட்பேன் என கூறியுள்ளார். இதன் காரணமாக கொளஞ்சி பெரியசாமியின் தாயான செல்வியிடம் சென்று பிரச்னை செய்துள்ளார். அப்போது செல்வியை மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.  இதில் காயமடைந்த செல்வி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: