×

அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்பான உத்தரவு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளது: உச்சநீதிமன்றத்தில் கர்நாடக காங்கிரஸ் மனு

புதுடெல்லி: அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அரசியல் கட்சிகளுக்கு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை பறிப்பது போல் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் தங்களையும் பிரதிவாதியாக சேர்க்கவும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் 15 எம்எல்ஏக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்ற உத்தரவுக்கு தெளிவான விளக்கம் கேட்டு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக குமாரசாமி ஆட்சி காப்பாற்றப்படுமா? அல்லது கவிழ்க்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தான் உள்ளது. காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்தனர். மேலும் அவர்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்கவில்லை. இதையடுத்து, ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கக்கோரி 15 அதிருப்தி  எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையில், ராஜினாமா கடிதம் மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது.

இருப்பினும், நியாயமான காலவரையறைக்குள் 15 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ராஜினாமா விவகாரத்தில், சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஏற்கனவே, இந்த வழக்கில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீது தகுதி நீக்கம் போன்ற எந்த நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்திலும் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பங்கேற்கவில்லை.  மேலும், அவையில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அமளி காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று நடத்த முடியாது என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு விளக்கம் கேட்டு கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற உத்தரவு, அரசியல் கட்சிகளுக்கு அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அதிகாரத்தை பறிப்பது போல் இருக்கிறது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுமாறு உத்தரவிட கொறடாவுக்கு கூட அதிகாரம் இல்லையா என்பதை தெளிவாக தீர்ப்பில் கூறவில்லை என விளக்கம் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அடுத்த 2 தினங்களுக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை என்பதால், திங்கட்கிழமை இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Dissatisfied MLAs, Supreme Court, Karnataka Congress, petition
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...