×

மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும்... குமாரசாமிக்கு 2-வது முறையாக கெடு விதித்த ஆளுநர்

பெங்களூரு: மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா 2-வது கெடு விதித்துள்ளார். ஏற்கனவே பகல் 1.30-க்கு குமாரசாமி நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று கெடு விதித்திருந்தார். இந்நிலையில் ஆளுநர் மீண்டும் கெடு விதித்துள்ளதால் கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஆளும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்ள 15 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதனால் ஆளும்கட்சி பெரும்பான்மை பலமிழந்தது. முதல்வர் பதவி விலகக்கோரி பாஜவினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் முதல்வர் குமாரசாமி, தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு அனுமதி மற்றும் தேதி நிர்ணயம் செய்யும்படியும் சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமாரிடம் கோரிக்கை வைத்தார். அதையேற்றுக்கொண்ட சபாநாயகர் ஜூலை 18ம் தேதி நம்பிக்கை வாக்குகோரும் தீர்மானம் கொண்டுவர அனுமதி வழங்கினார். அதன்படி நேற்று காலை 11 மணிக்கு பேரவை கூடியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்து பேசினார்.

இடையில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சித்தராமையா பாயிண்ட் ஆப் ஆர்டர் கொண்டு வந்து, ‘‘காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பத்து பேர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இறுதி தீர்ப்பு வரும்வரை நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாமல் ஒத்தி வைக்க வேண்டும்’’ என்றார். சித்தராமையா எழுப்பிய சட்டப் பிரச்னையால் பேரவையில் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பகல் உணவு இடைவேளைக்கு பின் பேரவை கூடியதும் காகாவாட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சீமந்தபாட்டீலை பாஜவினர் கடத்தி சென்றுள்ளதாக அமைச்சர் டி.கே.சிவகுமார் பிரச்னை எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இடையில் கடும் வாக்கு வாதமும், மோதலும் ஏற்பட்டது. கடும் பிரச்சினைகளுக்கு இடையே நம்பிக்கை தீர்மானம் மீது கர்நாடக சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா உத்தரவிட்டார். நம்பிக்கை தீர்மானம் மீது கர்நாடக சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருவதால் மீண்டும் மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா 2-வது கெடு விதித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் குமாரசாமி மனு

நம்பிக்கை வாக்கு தொடர்பாக கொறடா உத்தரவுக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதேநேரத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கவர்னரின் உத்தரவுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் முதல்வர் குமாரசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.


Tags : Karnataka, BJP, Majatha, Congress, Karnataka Politics, MLAs, Supreme Court, Karnataka Governor
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்