பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2,500 கன அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 2,000 கன அடியும், கபினி அணையில் இருந்து 500 கன அடியும் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கர்நாடக அணிகளில் இருந்து திறக்கப்பட்ட நீரின் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை தமிழகம் வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வரை வினாடிக்கு 850 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
இந்த நீரானது அடுத்த 3 நாட்களுக்குள் தமிழக- கர்நாடக எல்லையான பில்லி குண்டுலுக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, 5 நாட்களுக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் 9ம் தேதி, கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட அம்மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டிருந்தார். தமிழகத்தில் போதிய மழை இல்லாத காரணத்தினால் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கர்நாடகா அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகா விவசாயிகள் பயன்பெற ஏதுவாக காவிரியில் நீர் திறக்க முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல் தெரிவித்திருந்தார். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அதிகாரிகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தமிழகத்திற்கு கர்நாடக அணிகளில் இருந்து நாளொன்றுக்கு 855 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதாவது கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 355 கன அடி நீரும், கபினி அணையிலிருந்து 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது நீர் திறப்பு அதிகரித்துள்ளது. மழை காரணமாக மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.